திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பொதுமக்களின் வழிபாட்டுக்காக புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனை உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு இந்து முன்னணி சார்பில் மாநகரில் 1,800 சிலைகளும், தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கயம், உடுமலை, மடத்துக்குளம், வெள்ளகோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3, 800 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயிலில் குபேர விநாயகர் சிலை, அரண்மனை புதூரில் வில் அம்புடன் கூடிய ராமாவதார விநாயகர் சிலை, காய்கறி மார்க்கெட் பகுதியில் யானை மீது அமர்ந்து இருக்கும் 12 அடி உயர கஜ ராஜ விநாயகர் சிலை என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, புதன்கிழமை காலை முதல் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகளும் நடத்தப்ப்டு வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகருக்கு கொழுக்கட்டை உள்ளிட்ட பதார்த்தங்கள் படைத்து சுவாமி தரிசனம் செய்தனர். மாநகரில் உள்ள பலவேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.