அதிமுகவில் இருந்து விலகிய கோவை செல்வராஜ், தனது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் இருந்து இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வத்தின் அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் கடந்த சனிக்கிழமை அறிவித்தார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சைகள் சமீபகாலமாக தீவிரமடைந்து வருகின்றன. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என இரண்டாக பிரிந்துள்ளது.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வத்தின் அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் அறிவித்தார். அதிமுகவில் தொடர்ந்து செயல்பட வேண்டாம் என முடிவுவெடுத்துள்ளேன். அதேசமயம் திராவிட பாரம்பரியத்தை விட்டு விலகமாட்டேன், நல்ல முடிவு விரைவில் எடுப்பேன், ஒருநாளும் அரசியலை விட்டு விலகமாட்டேன் என்று அவர் கூறியிருந்தார்.
இதையும் படிக்க | சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கோர விபத்து: 6 பேர் பலி!
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தனது ஆதரவாளர்களுடன் சந்தித்த கோவை செல்வராஜ் புதன்கிழமை திமுகவில் இணைந்தார்.
பின்னர் அவர் திமுகவில் இணைந்ததற்கான காரணத்தை செய்தியாளர்களிடம் கூறினார்.
அப்போது, தமிழ்நாட்டில் திராவிட பாரம்பரியமாக திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது ஆட்சியே அல்ல. சுனாமி போல் தமிழ்நாட்டு மக்களை தாக்கியது. அவர்களுடன் இணைந்து செயல்பட்டத்தற்கு இறவைனிடம் பாவ மன்னிப்பு கேட்கிறேன்.
தொடர்ந்து திராவிட பாரம்பரியத்தில் நீடிக்கவே திமுகவில் இணைந்தேன். தமிழ்நாட்டு மக்கள் மதவாத இயக்கத்திற்கு துணைபோக மாட்டார்கள். மதவாத இயக்கம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்துவிடுமோ என்கிற பாவனையில் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
திமுக மக்களாட்சியாக செயல்படுகிறது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார் என செல்வராஜ் கூறினார்.