மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் உள் மாவட்டங்களான வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வேலூர் மாநகராட்சி கன்சால்பேட்டையில் கழிவுநீரோடு மழை நீர் தேங்கி நிற்பதால் குடியிருப்பு வாசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக வலுப்பெற்று பின்னர் புயலாக வலுவிழந்து வெள்ளிக்கிழமை 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது.
சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | கடற்கரை- வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவை ரத்து!
மேலும், சனிக்கிழமை காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் மாண்டஸ் புயல் பின்னர் படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் உள் மாவட்டங்களான வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
வேலூர் மாநகராட்சி கன்சால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெருவில் தேங்கி மழை நீர் தேங்கி நிற்க்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வழியாக செல்லும் நிக்கல்சன் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் கால்வாயில் செல்லும் நீரின் அளவு அதிகரித்ததால் குடியிருப்புக்குள் புகுந்து கழிவு நீருடன் சேர்ந்து மழை நீரும் தெரு முழுவதும் தேங்கியுள்ளது.
மேலும், தண்ணீரின் அளவு உயராத வண்ணம் மாநகராட்சி ஊழியர்கள் மணல் மூட்டைகளை அடுக்கி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டு மழைக்காலத்தின் போதும் இப்பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.