மாண்டஸ் புயல், கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: மார்க்சிய கம்யூ. வலியுறுத்தல்

மாண்டஸ் புயல் மற்றும் நவம்பர் மாத கனமழையால் பாதிக்கபட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கே.பாலகிருஷ்ணன் 
கே.பாலகிருஷ்ணன் 

மாண்டஸ் புயல் மற்றும் நவம்பர் மாத கனமழையால் பாதிக்கபட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என வானிலை மையம் சென்னை உள்ளிட்டு பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. இப்புயலை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டது.

இதனைத்தொடர்ந்து ஊரக உள்ளாட்சித்துறை, சுகாதாரம், வருவாய்த்துறை, இயற்கை பேரிடர் மேலாண்மைத்துறை, பொதுப்பணித்துறை என அனைத்துத்துறை ஊழியர்களும், அரசு அதிகாரிகளும், முன்களப் பணியாளர்களும் இப்பணியை மேற்கொண்டனர். இத்தகைய நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது, இதற்கான முன்முயற்சிகளை மேற்கொண்ட மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களையும் பாராட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  “நவம்பர் மாதம் பெய்த கனமழையினால் மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. தற்போதைய மாண்டஸ் புயலினால் ஏற்பட்ட சூறைக்காற்று, கன மழையினால் எதிர்பார்த்த அளவு பாதிப்பு இல்லை. எனினும், ஐந்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கியும், மழையினாலும் உயிரிழந்துள்ளனர்.

கால்நடைகள் உயிரிழந்துள்ளன. கனமழையினால் வீடுகள் மற்றும் குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர். சென்னை உள்ளிட்டு கடலோர பகுதிகளில் மீனவர்களின் படகுகள், வலைகள் சேதமடைந்துள்ளன. வேதாரண்யத்தில் கடல்நீர் உட்புகுந்து உப்பளங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை உள்ளிட்டு பல இடங்களில் வாழை மரங்கள் முறிந்துள்ளன. பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன. இதனால் மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் புயல் வரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் உள்ளன.

மேலும், மாண்டேஸ் புயல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கும், வீடுகள் உடமைகளை இழந்த மக்களுக்கும், மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையினை வழங்கிட வேண்டுமெனவும், கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com