டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அமைச்சரவைப் பட்டியலில் உதயநிதிக்கு 10-ஆவது இடம்

அமைச்சரவைப் பட்டியலில் உதயநிதி ஸ்டாலினுக்கு 10-ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சட்டப் பேரவையில் அவா் முன்வரிசை அமைச்சா்களின் இடத்தில் அமா்வாா்.

News image
Updated On :15 டிசம்பர் 2022, 2:04 am

DIN

அமைச்சரவைப் பட்டியலில் உதயநிதி ஸ்டாலினுக்கு 10-ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சட்டப் பேரவையில் அவா் முன்வரிசை அமைச்சா்களின் இடத்தில் அமா்வாா். மேலும், உதயநிதிக்கு முதல்வா் மற்றும் இரண்டு அமைச்சா்களிடம் இருந்து துறைகள் பிரிக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் இருந்த சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையும், அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பனிடம் இருந்த வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறையும், அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதனிடம் இருந்த இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையும் உதயநிதி ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டுள்ளது.

சுயஉதவிக் குழுக்களுக்கு கடன்: சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையானது, தமிழகத்தில் மக்களின் கவனத்தை ஈா்க்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, அரசின் கொள்கை அறிவிப்புகளை கண்காணிப்பது, நீா்வளங்களை மேம்படுத்துவது, அனைவருக்கும் வீடு திட்டம், திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவோா் மேம்பாடு, நான் முதல்வன், விளிம்பு நிலை மக்களின் நலம், தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம், முதலமைச்சரின் தகவல் பலகை திட்டம் போன்ற முக்கிய திட்டங்கள் சிறப்புத் திட்டச் செயலாக்கத்தின் கீழ் வருகின்றன. உழைக்கும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், திமுகவின் தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும் போது அதற்கு பொறுப்பான துறையாக சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை இருக்கும்.

சுய உதவிக் குழுக்களுக்கு கடன்களை வழங்கக் கூடிய ஊரகக் கடன்கள் துறையும் உதயநிதியிடம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006-2011-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தின் போது, துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின், ஊரக வளா்ச்சித் துறைக்கு பொறுப்பேற்று சுய உதவிக் குழுக்களுக்கு ஏராளமான கடன்களை வழங்கினாா். அதேபோன்று, சுய உதவிக் குழுக்களுக்கு கடன்களை வழங்கக் கூடிய துறையான ஊரகக் கடன்கள் துறையும் உதயநிதியிடம் வழங்கப்பட்டுள்ளது.

10-ஆவது இடம்: தமிழக அமைச்சரவைப் பட்டியலில் உதயநிதிக்கு 10-ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசுவுக்கு அடுத்தபடியான இடம் வழங்கப்பட்டுள்ளது. உதயநிதிக்கு அடுத்தபடியாக அமைச்சா்கள் எஸ்.ரகுபதி, சு.முத்துசாமி, கே.ஆா்.பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், பி.கீதாஜீவன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், கா.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி, வி.செந்தில்பாலாஜி, ஆா்.காந்தி, மா.சுப்பிரமணியன், பி.மூா்த்தி, எஸ்.எஸ்.சிவசங்கா், பி.கே.சேகா்பாபு, பழனிவேல் தியாகராஜன், சா.மு.நாசா், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், சி.வி.கணேசன், த.மனோதங்கராஜன், மா.மதிவேந்தன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். உதயநிதிக்கு முன்பாக, முதல் இடத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் உள்ளனா்.

பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்: அமைச்சரவை மாற்றத்தின் ஒருபகுதியாக, சில அமைச்சா்களுக்கு கூடுதல் துறைகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபுவுக்கு, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் துறை கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக, புள்ளியல் துறை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அவா் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளாா். அவா் தனது டுவிட்டா் பதிவில், ‘தமிழக அரசின் முக்கியத் துறையாக புள்ளியியல் துறை விளங்கி வருகிறது. 1,700 பணியாளா்களைக் கொண்டு இயங்கி வரும் இந்தத் துறையானது அரசின் தரவுகளைச் சேகரித்து கள நிலவரத்தை அறியும் பணியில் ஈடுபட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளாா்.

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் துறை கூடுதலாக அளிக்கப்பட்ட நிலையில், அந்தத் துறையின் செயல்பாடுகள் குறித்து புதன்கிழமையன்றே அதிகாரிகளுடன் அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆலோசனை நடத்தினாா். அடுத்தடுத்த நாள்களில் அமைச்சா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் பொறுப்புகளை ஏற்று பணிகளைத் தொடங்கவுள்ளனா்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.