குன்னூரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயலின் காரணமாக கடந்த வாரம் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடுமையான பனி மூட்டத்துடன் தொடர் சாரல் மழை பெய்து வந்தது.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. நேற்று விடிய விடியக் கொட்டித் தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது.
குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மட்டும் 11 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அப்பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மலை ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குன்னூரில் இதுவரை 30 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
கனமழை எதிரொலியாக மாணவர்களின் பாதுகாப்புக் கருதி குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.