சென்னை: ஜெயலலிதா மரணத்தில் மறைக்க எதுவுமில்லை. அவருக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்தானே? என்று வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.
தமிழக அரசில் பொறுப்பேற்று நான் அமைச்சராக இல்லையே தவிர, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து 24 மணி நேரமும் மக்களுக்கு என்ன செய்தால் நல்லதாக இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டுதான் இருப்பேன் என்றும் வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. தமிழகத்தில் முதல் முறை.. தாயிடமிருந்து கருப்பை தானம் பெற்ற மகள்கள்!
சென்னையில் இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கூறியதாவது, 24 மணி நேரமும் மக்களுக்கு என்ன செய்தால் நல்லதாக இருக்கும் என சந்தித்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் கலந்தாலோசனை செய்து, நாங்கள் ஆலோசனை செய்த விஷயங்கள் எல்லாம் மக்களிடம் கொண்டு சென்று சேர்த்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கைக் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை எய்ம்ஸ் மருத்துவர்களும் வந்து பார்த்துச் சென்றனர். எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது, எய்ம்ஸ் மருத்துவர்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்தானே?
எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் தினமும் வந்து ஜெயலலிதாவை பரிசோதனை செய்து அறிக்கை கொடுத்தார்கள். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்று கூறினார்.
மேலும், சிகிச்சைக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு ஏன் அழைத்துச் செல்லவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க எனக்கு விருப்பம்தான். ஆனால், வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதை ஜெயலலிதா ஏற்கவில்லை. சென்னையே மருத்துவத் துறையின் தலைநகரம். அப்படியிருக்க வெளிநாடு செல்ல அவர் விரும்பவில்லை. மருத்துவர்களை இங்கே வரவழைத்து சிகிச்சை பெறவே அவர் விரும்பினார் என்று சசிகலா பதிலளித்துள்ளார்.