வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றதையடுத்து தற்போது நாகைக்கு கிழக்கே 480 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும் நேற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது.
இந்நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை நிலவரப்படி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாகை கடற்கரையிலிருந்து 480 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து கன்னியாகுமரி கடற்பகுதியை நோக்கி வரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால், டிச. 25, 26 ஆம் தேதிகளில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.