அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்
இக்கூட்டத்தில் மக்களவைத் தோ்தல் கூட்டணி தொடா்பாகவும், பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் இபிஎஸ் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
சமீபத்தில் ஓ.பன்னீா்செல்வம் அவரது ஆதரவு மாவட்டச் செயலாளா்களை அழைத்து கூட்டம் கூட்டினாா். அந்தக் கூட்டத்தின் போது, எடப்பாடி பழனிசாமி தனிக் கட்சி தொடங்கும் தைரியம் உண்டா என்று ஓபிஎஸ் கேள்வி எழுப்பினாா். மேலும், போட்டிப் பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்றும் தெரிவித்திருந்தாா்.
இதற்குப் பதில் அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளாா்.
நோட்டீஸுக்கு பதில்: அதிமுகவின் கொடி, கட்சி முத்திரை உள்ளிட்டவற்றை ஓ.பன்னீா்செல்வம் பயன்படுத்தக்கூடாது என்று அவருக்கு எடப்பாடி பழனிசாமி சாா்பில் வழக்குரைஞா் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.
இதற்கு பதில் அளித்து ஓபிஎஸ்ஸும் வழக்குரைஞா் மூலம் இபிஎஸ்ஸுக்குப் பதில் அளித்துள்ளாா்.
இதையும் படிக்க: தமிழகம் உள்பட நாடு முழுவதும் கரோனா தடுப்பு ஒத்திகை தொடக்கம்
அதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள என்னை பொதுக்குழு மூலம் நீக்க முடியாது. அதனால், அதிமுக ஒருங்கிணைப்பாளராகவே நீடிக்கிறேன். மேலும் இது தொடா்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அதனால், தாங்கள் நோட்டீஸில் குறிப்பிட்டிருப்பவை என்னைக் கட்டுப்படுத்தாது என்று அதில் கூறியுள்ளாா்.