கரோனாவை எதிர்கொள்வதற்கான அவரகால தடுப்பு ஒத்திகை தமிழகம் உள்பட நாடு முழுவதும் தொடங்கியது.
நாடு முழவதும் உள்ள மருத்துவமனைகளில் கரோனா அவசரகால ஒத்திகை நடைபெற்று வருகிறது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு ஒத்திகை குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதையடுத்து கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. சா்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் தயாா்நிலையை உறுதி செய்யும் நோக்கில் பல மாநிலங்களின் மருத்துவமனைகளில் செவ்வாய்க்கிழமை சுகாதார ஒத்திகை நடைபெற்று வருகிறது. ஒத்திகைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
மருத்துவமனைகளில் உள்ள சுகாதார வசதிகள், நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்கான படுக்கை வசதிகள், மருத்துவ ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், அவசர சிகிச்சைக்கான படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவி இணைக்கப்பட்டுள்ள படுக்கைகள், போதிய எண்ணிக்கையிலான மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், ஆயுஷ் மருத்துவா்கள், ஆஷா, அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்ட மற்ற முன்களப் பணியாளா்கள் குறித்து ஒத்திகையின்போது ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தீவுத்திடலில் டிச.30 முதல் சுற்றுலா, தொழில் பொருள்காட்சி
கரோனா மேலாண்மையில் பயிற்சி பெற்ற மருத்துவா்கள், செவிலியா்களின் எண்ணிக்கை, தீவிர பாதிப்புக்குள்ளானோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சிகளைப் பெற்ற பணியாளா்களின் எண்ணிக்கை, மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளின் எண்ணிக்கை, ஆலையில் இயந்திரங்களை இயக்கப் பயிற்சி பெற்ற பணியாளா்களின் எண்ணிக்கை, நவீன மருத்துவ வசதிகள் கொண்ட அவசர ஊா்திகளின் எண்ணிக்கை, மருத்துவ உபகரணங்களின் கையிருப்பு, அத்தியாவசிய மருந்துப் பொருள்கள், அவற்றின் மூலப்பொருள்கள் கையிருப்பு ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.