சென்னை: சென்னையின் 174 வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, 94 வயதாகும் காமாட்சி சுப்ரமணியன் நேற்று வேட்பு மனுவைத்தாக்கல் செய்தார்.
அடையாறு மற்றும் பெசன்ட் நகர் பகுதிகளை உள்ளடக்கிய 174வது வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் சமூக ஆர்வலராக இந்த காமாட்சிப் பாட்டியை அப்பகுதியில் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் என்று சொல்லுமளவுக்கு அவர் பிரபலமானவர்.
பெசன்ட் நகர் பகுதியைச் சுற்றிலும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை, அவர் போராடிப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
அனைவராலும் காமாட்சி பாட்டி என்று அன்போடு அழைக்கப்படும் இவரது அயராது முயற்சியின் காரணமாகத்தான், எல்லியட்ஸ் கடற்கரையில் இருந்த கார்ல் ஷ்மிட் நினைவகம் மீட்கப்பட்டது. ஸ்பார்க் எனப்படும் அமைப்பின் இணை நிறுவனராக இருக்கிறார். இந்த ஸ்பார்க் அமைப்பு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்காக போராடும் வகையில் செயல்பட்டு வருகிறது.
தங்கள் பகுதியில், சாலை அமைப்பது போன்ற, பொது மக்களின் வரிப்பணத்தைக் கொண்டுசெயல்படுத்தப்படும் எந்த விதமான திட்டப் பணிகளையும், ரகசியமாக ஆய்வு செய்து, அதிலிருக்கும் தவறுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதில் வல்லவர் இந்த காமாட்சிப் பாட்டி.
எவ்வித அதிகாரமும் இல்லாமல் இந்த அளவுக்கு சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் 94 வயது காமாட்சிப் பாட்டி, தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, வேட்பு மனுவையும் தாக்கல் செய்திருக்கிறார்.