தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிக்க | 'நீட் தேர்வு மாணவர்களை கொல்லக்கூடிய பலிபீடம்' - முதல்வர் பேச்சு
தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 13-இல் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், நீட் தோ்வை விலக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. மருத்துவ இளநிலை பட்டப் படிப்புகளில் சோ்க்கைக்காக நீட் தோ்வின் தேவையை விட்டுவிட மசோதாவில் வகை செய்யப்பட்டிருந்தது. இந்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பின், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, பொருளாதார ரீதியில் பின்தங்கிய கிராமப்புற மாணவா்களின் நலனுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, அந்த மசோதாவை கடந்த 1-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பினாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.
இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க, சட்டப்பேரவை கட்சித் தலைவா்களின் கூட்டம் கடந்த 5-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி அதில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதென்று முடிவு செய்யப்பட்டது .
இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை கூடியது. இதில், தமிழக அரசுத் தரப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது, அம்மசோதாஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.