பாவூர்சத்திரம்: தோரணமலை முருகன் கோயிலில் விவசாயம் செழிக்க வேண்டி வருண கலசம் மற்றும் வேல் பூஜை வெள்ளிக்கிழமை (பிப்.11) காலை நடைபெற்றது.
தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் விவசாயம் தழைக்க வேண்டி வருண கலச பூஜையுடன், வேல் பூஜையும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்காக அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வேல்பூஜை விவசாயிகளால் நடத்தப்பட்டது.
மேலும், மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தலைமையில் செய்திருந்தனர்.