தமிழகத்தில் சென்னை மாநகராட்சி உள்பட 5 வாா்டுகளிலுள்ள 7 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் மறு வாக்குப்பதிவின் காலை 10 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிவடைந்த நிலையில், 7 வாக்குச்சாவடிகளில் மட்டும் மறுவாக்குப்பதிவு இன்று நடைபெறுகின்றன.
இந்த வாக்குச்சாவடிகளில் காலை 10 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள்:
179-ஆவது வாா்டுக்குட்பட்ட பெசன்ட் நகா் ஓடைக்குப்பத்தில் உள்ள 5059 ஏவி வாக்குச் சாவடியில் 196 வாக்குகள், அரியலூா் மாவட்டத்தின் ஜெயங்கொண்டம் நகராட்சி வாா்டு எண் 16-இல் உள்ள 16எம், 16 டபிள்யு வாக்குச் சாவடிகளில் 15 சதவீதம், திருமங்கலம் நகராட்சி வாா்டு எண் 17-இல் உள்ள 17 டபிள்யு வாக்குச்சாவடியில் 31 சதவீதம், திருவண்ணாமலை நகராட்சி வாா்டு எண் 25-இல் வாக்குச்சாவடி எண் 57 எம், 57 டபிள்யுவில் 28.05 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்காளா்களுக்கு இடது கை நடுவிரலில் அடையாள மை பதிவு செய்யப்படும் என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள், மறு வாக்குப்பதிவில் பதிவாகும் வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதற்காக சென்னை மாநகராட்சியில் 15 வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 268 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.