மதுரை மாநகராட்சி 30-வது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு எண்ணும் மையத்தில் மாநகராட்சி ஆணையர் வாகனம் முன்பு அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாநகராட்சியின் 30வது வார்டில் விசிக, அதிமுக, பாஜக உள்ளிட்ட 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த வார்டில் 7 ஆயிரத்து 491 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் அதிமுக வேட்பாளர் வசந்தா தேவி 2,366 வாக்குகள் பெற்றார். விசிக வேட்பாளர் மோகனா 2,344 வாக்குகள் பெற்றார். இதையடுத்து 22 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதாக வாக்கெண்ணும் அலுவலர்கள் அதிமுகவுக்கு சாதகமாக நடந்து கொண்டதாகவும் கூறி விசிக வேட்பாளர் மோகனா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மாநகராட்சி ஆணையரின் வாகனம் முன்பு அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டதால் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.