காரைக்கால் : காரைக்கால் மீனவர்கள் 13 பேரை எல்லை தாண்டிய மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரிமேடு கிராமத்தை சேர்ந்த வீரமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், செல்வமணி, ரமேஷ், திலீபன், சுரேஷ் உள்ளிட்ட 13 பேர் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த புதன்கிழமை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டியதாக அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், மீனவர்கள் 13 பேரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இவர்கள் இலங்கை மயிலட்டி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக காரைக்கால் மீனவ கிராமப் பஞ்சாயத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து கிராமப் பஞ்சாயத்தார்கள் காரைக்கால் மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி கோட்டுச்சேரிமேடு பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து சில வாரங்களில் மீண்டும் 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.