ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் ராமன். அவர் மனைவி லீலாவதி. இவர்களுக்கு 22 வயதில் நர்மதா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
உக்ரைன் நாட்டிற்கு மருத்துவம் படிக்க சென்ற நர்மதா தற்போது அங்கு இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ரஷியா - உக்ரைன் போர் காரணமாக மாணவி சொந்த நாட்டிற்கு திரும்ப முடியவில்லை.
தற்போது, உக்ரைனில் சிக்கிய மாணவி அங்குள்ள ஒரு வீட்டில் தங்கியிருப்பதாகவும், உணவு கிடைக்காமல் தவித்து வருவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர். மகளை மீட்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில்,
உக்ரைனில் 3-வது நாளாக போர் நடந்து வருவதால் அங்குள்ள உணவு விடுதிகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு வேளை உணவின்றி மாணவ, மாணவியர்கள் தவித்து வருகிறார்கள். தண்ணீர் மட்டுமே தற்சமயம் கிடைத்து வருகிறது.
தங்கியிருக்கும் பகுதிகளில் தொடர்ந்து குண்டுகள் விழுகின்றன. இதனால், நில அதிர்வுகள் ஏற்படுகிறது. உயிர் பயம் ஏற்பட்டுள்ளதாக தங்களது மகள் கண்ணீர் மல்க கூறினாள் என்றனர்.
இதனைக் கேட்டு எங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மிகவும் பதற்றமாகவும், பயமாகவும் உள்ளது. உடனடியாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து எங்களது மகள் மற்றும் அவருடன் உள்ள மாணவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்றனர்.
நர்மதாவுடன் பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 10 மாணவர்களும் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.