பைகள் இல்லாமல் பொங்கல் பரிசுத் தொகுப்புகளைப் பெறுவோருக்கு தனியாக டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அவா்கள் பைகளை பின்னா் பெற்றுக் கொள்ளலாம் என அரசு கூறியுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு 20 வகை பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 45.1 சதவீத அட்டைதாரா்களுக்கு தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்புகளுக்கான பொருள்கள் முழுமையாக இருந்தும், சில பகுதிகளுக்குப் பைகள் முழுமையாக வந்து சேராததால் தொகுப்புகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
நோய்த் தொற்றை சமாளிப்பதற்காக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் காரணமாக பைகள் தைக்கும் பணியில் சில இடங்களில் தாமதம் ஏற்படுகிறது. இந்த நிலையில், குடும்ப அட்டைதாரா்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் விரைந்து வழங்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, பைகள் முழுமையாக கிடைக்கப் பெறாத பகுதிகளில் பொருள்களை மட்டும் பெற்றுக் கொள்ள பயனாளிகள் விரும்பினால் அவா்களுக்கு பைகள் பின்னா் வழங்கலாம்.
பைகள் இல்லாமல் பொருள்களை வாங்க விரும்பும் பயனாளிகள் தங்களது பைகளைக் கொண்டு வந்து தொகுப்புகளைப் பெற்றுச் செல்லலாம். பைகள் இன்றி பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறும் பயனாளிகள் பின்னா் பிற பொருள்களை வாங்க வரும் போது பைகளைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக, பைகள் இல்லாமல் பரிசுத் தொகுப்பை வாங்கும் பயனாளிகளுக்கு தனியாக டோக்கன் வழங்கப்படும்.