கரோனா இரண்டாம் அலையின்போது அதிகம் பேசப்பட்ட, வாங்கப்பட்ட பொருள்களில் பல்ஸ் ஆக்ஸிமீட்டரும் ஒன்று. மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பலரது கேள்வியாக இருக்கும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் என்றால் என்ன? அதனை கரோனா பாதித்தவர்கள் நிச்சயமாக வாங்க வேண்டுமா? என்ற கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.
அதாவது, கரோனா பாதித்து தீவிரமடையும்போது, சிலருக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையும். அதுவும் கரோனாவின் ஒரு அறிகுறி. ஆனால், அந்த அறிகுறி எல்லோருக்கும் பொதுவாக ஏற்படுவதில்லை.
ஆனால், எதிர்பாராதவகையில், சில கரோனா நோயாளிகளுக்கு திடீரென ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. அப்போது, அவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட வேறு பிரச்னைகள் எதுவும் ஏற்படுவதில்லை. எனவேதான், கரோனா பாதித்தவர்கள், தங்களது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் கண்டறிய பல்ஸ் ஆக்ஸிமீட்டரை வாங்கிக் கொள்கிறார்கள்.
இந்த பல்ஸ் ஆக்ஸிமீட்டரை வாங்கி வைத்துக் கொண்டு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை பரிசோதிப்பதால் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு? ஒருவரது நுரையீரல் சீராகத் துடித்து, உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை ரத்தத்துக்கு வழங்கி வருகிறது என்பதை வீட்டிலேயே நாம் உறுதி செய்து கொள்ள முடியும்.
ஒரு வேளை, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையும்பட்சத்தில் உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம். இதுதான் பல்ஸ் ஆக்சிமீட்டரின் பயன்பாடு.
கரோனா பாதித்து எந்த அறிகுறியும் இல்லாமல் இருப்பவர்கள் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வாங்கத் தேவையில்லை. ஏற்கனவே இணை நோய் உள்ளவர்கள், நுரையீரலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் மட்டும் தேவையெனில் அல்லது மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் இதனை வாங்கிப் பயன்படுத்தலாம்.