எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட கடைகளை பொது ஏலம் மூலம் வாடகை நிர்ணயம் செய்திடக் கோரி இன்று காலை பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் மேற்கு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பூலாம்பட்டி பேரூராட்சி. பேரூராட்சிக்குச் சொந்தமாக பூலாம்பட்டி பேருந்து நிலையம், மேட்டூர் பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு மூன்றாண்டுக்கு ஒருமுறை பொது ஏலம் நடத்தி வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டு வாடகைக்கு விடப்பட்டு வந்தது.
10 ஆண்டுகளாக நடைபெறாத பொது ஏலம்
இந்நிலையில் பூலாம்பட்டி பேரூராட்சிக்குச் சொந்தமான கடைகளில் உணவகங்கள், பல்பொருள் அங்காடி உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. பேரூராட்சி கடைகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக பொது ஏலம் நடத்தப்படாமல் சொற்ப வாடகை உயர்வு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட வாடகை ஒப்பந்ததாரர்களுக்கே மீண்டும் மீண்டும் வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், தனிப்பட்ட சிலரே பயனடையும் வகையில் வாடகை ஒப்பந்தம் அமைந்துள்ளதாகவும் இவ்வாடகை ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து பொது ஏலம் நடத்தி அதன் மூலம் கடைகளுக்கு புதிய வாடகையை நிர்ணயம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பூலாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை மேற்கொண்டுவருகின்றனர்.