நாகப்பட்டினம்: நாகை அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் திருஅத்யயன வைகுந்த ஏகாதசிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது நாகை அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள். இக்கோயிலில், திருஅத்யயன வைகுந்த ஏகாதசிப் பெருவிழா கடந்த 3-ஆம் தேதி பகல் பத்து உத்ஸவத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. பகல் பத்து உத்ஸவ நிறைவாக ஸ்ரீ பெருமாள் மோகன அவதாரத்தில் சேவை சாதித்தார்.
ஏகாதசிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. காலை சுமார் 5.40 மணி அளவில் வேத மந்திர முழக்கங்களுடன், இன்னிசை வாத்தியங்கள் ஒலிக்க, ரத்ன அங்கி அலங்காரத்தில் அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள், ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக பரமபத வாசல் வழியே எழுந்தருளினார். அப்போது, கோவிந்தா! கோவிந்தா என்று பக்தி முழக்கங்களை எழுப்பி பக்தர்கள் வழிபட்டனர்.