நீடாமங்கலம்: நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறப்பு இன்று வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சையை ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்மரால் கிபி1761ல் கட்டப்பட்டது நீடாமங்கலம் சந்தானராமர் கோவில். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சதரால் பாடல் பெற்றது. புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியர் இக்கோவிலில் சந்தான கோபால ஜெபம் செய்து சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமரை வழிபட்டால் அப்பேற்றினை அடைவார்கள் என்பது ஐதீகமாக போற்றப்படுகிறது.
சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் திருஅத்யயன உற்சவம் பகல் பத்து கடந்த 3ம்தேதி தொடங்கி 12ம்தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது.
வியாழக்கிழமை இன்று 13 ம்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலையில் கோவிலில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.
தொடர்ந்து சீதா, லெட்சுமண சமேதராய் சந்தானராமர் பிரகார உலாவந்து கொடிமரத்தின் முன் எழுந்தருள வேதவிற்பன்னர்களால் ஆழ்வார் பாசுரங்கள் பாடப்பெற்று ஆராதனைகள் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சீதா,லெட்சுமண சமேதராய் சந்தானராமர் பரமபதவாசலில் எழுந்தருளினார். தொடர்ந்து ஆராதனைகள் நடத்தப்பட்டு மகாதீபாராதனையும் காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா...கோவிந்தா ...என முழங்கி சந்தானராமரை மனமுருகி வழிபட்டனர்.
சிறப்பு ஆராதனைகள், அர்ச்சனைகளை செய்து வைத்து பக்தர்களுக்கு பிரசாதங்களை அர்ச்சகர் நாராயணன் வழங்கினார். கோவில் விழா ஏற்பாடுகளை தக்கார் ரமேஷ், ஆய்வாளர் தமிழ்மணி, செயல் அலுவலர் சத்தியசீலன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இன்று 13 ம்தேதி வியாழக்கிழமை இரவு ராபத்து உற்சவம் தொடங்கி வரும் 22 ம்தேதி சனிக்கிழமை வரை நடைபெறுகிறது.
இதேபோல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஆலங்குடி அபயவரதராஜபெருமாள் கோவிலிலும் பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.