சேலத்தில் பொங்கல் விற்பனை களைகட்டியுள்ளது. சந்தைகளில், கரும்பு, மஞ்சள், பொங்கல் பொருட்கள் விற்பனை தீவிரமடைந்துள்ளன.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக நாங்கள் தயாராகி வருகிறோம் என்று பொங்கள் பொருள்கள் வாங்க வந்தவர்கள் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை நாளை, தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் பொங்கல் பொருள்களை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் கடைவீதி, பட்டை கோயில் அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் கரும்பு, மஞ்சள், பூ, பழம் உள்ளிட்ட பொங்கல் பொருள்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். இதனால் கடைவீதி, சாலைகள் அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
மேலும் கரும்பு விற்பனை, மஞ்சள் விற்பனையில் எந்த ஒரு விலை ஏற்றம் இல்லாமல் கடந்த ஆண்டு போலவே விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது தான் மக்கள் வெளியில் வரத் தொடங்கி உள்ளனர். விற்பனை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்பனை மிகவும் மோசமான நிலையில், இந்த ஆண்டு விற்பனை நன்றாக உள்ளது எனக் கரும்பு விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொதுமக்கள் கரோனா அச்சம் காரணமாக இரண்டு ஆண்டுகளாக வீடுகளிலேயே முடங்கி இருந்தோம். தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை என்றும் கொண்டாடாமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக இன்று நாங்கள் கரும்பு வாங்க வந்துள்ளோம். மக்கள் அச்சத்தின் காரணமாக வெளியில் வராமல் உள்ளனர். ஆனால் இந்தத் தைத் திருநாளை எப்போதும் போல குடும்பத்துடன் கொண்டாட இதற்காக நாங்கள் தயாராகி வருகிறோம் என்று கூறினர்.