தமிழகத்தில் ஹிந்தி படிப்பதைத் தடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவது என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதையும் அரசு குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கடலூரைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில் ஆங்கிலத்தை அனுமதிக்கும்போது நாட்டின் அலுவல் மொழியான ஹிந்தியை எதிர்ப்பது அரசியல்சட்டத்துக்கு விரோதமானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், எந்த மொழியை கற்க வேண்டும் என்பதை மாநில அரசு முடிவெடுக்கலாம். எனினும் ஹிந்தி படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையெனில், வேறு மாநிலங்களில் பணியாற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் மக்கள் நலன் கருதி முடிவெடுக்க வேண்டும். கூடுதலாக ஒரு மொழி சேர்ப்பதில் என்ன சிக்கல் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ஹிந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவது என கொள்கை முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதையடுத்து இந்த மனு தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.