குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றிவைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
நாட்டின் 73-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலை காந்தி சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார்.
முன்னதாக காமராஜர் சாலையில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் குடியரசு தினம் இது.
தேசியக்கொடியை ஏற்றிய பிறகு முப்படைகள் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றார்.
கரோனா பரவல் காரணமாக குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் பங்கேற்க அனுமதி வழங்கவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறே நிகழ்ச்சிகளை காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடியரசு தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 6,800 காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.