மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சட்டநாதபுரத்தில் அரசு ரேஷன் கடை இயங்கி வருகிறது. இங்கே அப்பகுதிகளை சேர்ந்த சுமார் 600 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் அக்கடையில் தமிழ்நாடு அரசு அறிவித்த பொங்கல் பரிசு இதுநாள் வரை வழங்கப்படவில்லை என்றும், பலருக்கு பொங்கல் பரிசு வழங்காமல் வழங்கப்பட்டு விட்டதாக செல்போனிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளதாக கூறப் படுகிறது.
மேலும், பொங்கல் பரிசு வழங்கப்பட்ட பல குடும்ப அட்டைதாரர்களுக்கும், அரசு வழங்கிய 21 பொருட்கள் வழங்காமல், பல பொருட்கள் குறைவாக வழங்கப்பட்டு, தராத பொருட்களை துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்து வேறொரு நாளில் வந்து பெற்றுக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், இதுநாள்வரை அந்தப் பொருட்களை தராமல் கடை ஊழியர் அளிப்பதாகவும், மேலும் தங்களுக்கு தரமற்ற அரிசியை வழங்குவதாகவும், இதுகுறித்து கடை ஊழியரிடம் கேட்கும்பொழுது உரிய பதில் தராமல் அலைகழிப்பு செய்ததாக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி காவல்துறையினர் மற்றும் வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் பேசி உரிய பொருட்கள் கிடைக்க வழிவகை செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.