சென்னையில் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்த அலுவலர்களுக்கு 2ம் தவணை மற்றும் பூஸ்டர் கரோனா தடுப்பூசி நாளை செலுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளுக்கு நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் 2022யை முன்னிட்டு, தேர்தல் பணிகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்த 27,812 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு, அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பணி நியமன ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பயிற்சி வகுப்புகளில் முதற்கட்ட பயிற்சி வகுப்பு நாளை (31.01.2022) நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பணி ஆணை நகல், வாக்காளர் அடையாள அட்டையினை தவறாமல் கொண்டு வர வேண்டும்.
மேலும், இந்தத் தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள் தபால் வாக்குகளை அளிக்க ஏதுவாக தாங்கள் வாக்கு செலுத்தும் வார்டு மற்றும் பகுதி விவரங்கள் மற்றும் வாக்காளர் வரிசை எண் (EPIC Serial No.) ஆகியவற்றை தவறாமல் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதையும் படிக்க- கரோனா 3வது அலையை வெல்ல மக்கள் ஒத்துழைப்பு அவசியம்: ராதாகிருஷ்ணன்
இந்த விவரங்களை https://tnsec.tn.nic.in/tn_election_urban2021/find_your_polling_station.php என்ற தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம். தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களில் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு 9 மாதங்கள் (39 வாரங்கள்) கடந்தவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியும் (Precautionary Booster Dose) நாளை நடைபெறும் முதற்கட்ட பயிற்சி வகுப்புகளில் செலுத்தப்படும். கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் பயிற்சி வகுப்பு நடைபெறும் நேரமான 10 மணிக்கு முன்னதாக பயிற்சி வகுப்புகளுக்கு வர வேண்டும்.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இரண்டாம்கட்ட பயிற்சி வகுப்புகள் 09.02.2022 அன்று நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது இந்தப் பயிற்சி வகுப்புகள் 10.02.2022 அன்று நடைபெறும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.