சென்னை: அதிமுக அலுவலகத்துக்குள் சில சமூக விரோதிகள் நுழைந்துள்ளனர் என்று ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்தது குறித்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக தொண்டர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு, வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார்.
இதையும் படிக்க.. அதிமுக தொண்டர்கள் எனது தலைமையையே விரும்புகின்றனர்: சசிகலா
அப்போது அவர் கூறியதாவது, அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் அத்துமீறி நுழையக் கூடும் என்று கூறி காவல்நிலையத்தில் மனு கொடுத்தோம். எனவே, அதிமுக தலைமை கட்சி அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரினோம். ஆனால், காவல்துறையினர் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அதனால், அதிமுக அலுவலகத்தில் சில சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
அதிமுக கட்சியின் தலைவராக இருந்தவர், முன்னாள் துணை முதல்வராக இருந்தவர் ஓ. பன்னீர்செல்வம். அவரே ரௌடிகளை அழைத்துக் கொண்டு வந்து கட்சியின் நிர்வாகிகளை தாக்கியுள்ளார். ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் இப்படி செய்யலாமா?
இது குறித்து அதிமுக சார்பில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்க விருக்கிறோம். ஓ. பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்து முக்கிய ஆவணங்களையும் அள்ளிச் சென்றுள்ளனர். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்களும் அதிமுக தொண்டர்களையே தாக்கியுள்ளனர். ரௌடிகளைத் தாக்கவில்லை. காவலர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு ஓ. பன்னீர்செல்வம் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. காலம் மாறும்போது தக்க பாடம் புகட்டுவோம் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.