/

காமராஜரின் 120ஆவது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:48 am

DIN

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: சென்னை கிண்டியில் அமைந்துள்ள காமராஜர் நினைவத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். காமராஜரின் சுதந்திர போராட்ட பங்களிப்பு மற்றும் கல்வியில் அவரது பங்களிப்பு போன்றவை குறித்து ஆளுநர் நினைவு கூர்ந்தார். சுதந்திரப் போராட்டத்தில் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக அசைந்து கொடுக்காமல் போராடியவர். அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். இவருடைய ஆட்சிக் காலத்தில் அணைகள், தொழிற்சாலைகள், கால்வாய்கள் என தமிழகத்தில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. எளிமையான வாழ்க்கையை கடைபிடித்தவர். மக்கள் சேவைக்காக அயராது உழைத்தவர். இளைஞர்களுக்கு எப்போதும் ஒரு உந்து சக்தியாக விளங்கக் கூடியவர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், அவரது தந்தை மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, காமராஜரின் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்ததை நினைவு கூர்ந்தார். பின்னர், கல்வி வளர்ச்சியில் காமராஜரின் பங்கு அளப்பரியது என்றார்.

கே.எஸ்.அழகிரி: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சத்தியமூர்த்தி பவனில் காமராஜருக்கு கட்சி தலைமையகத்தில் மரியாதை செலுத்தினர்.

என்.ரங்கசாமி: புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி, புதுச்சேரி அரசு காமராஜரின் கல்வித் திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்தி வருகிறது என்றார். காமராஜர் மணிமண்டப வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனை அவர் தெரிவித்தார். மேலும், மாணவர்களுக்கு இலவச கல்வியையும் புதுச்சேரி அரசு அளித்து வருகிறது. இந்த காமராஜர் மணிமண்டபம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியால் காணொளி மூலம் திறந்துவைக்கப்பட்டது என்றார். இதன் மூலம் காமராஜரின் தொலைநோக்கு பார்வைக்கு பிரதமர் நரேந்திர மோடி அளிக்கும் மரியாதையை உணர முடிகிறது என்றார்.

தமிழிசை சௌந்தரராஜன்: புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காமராஜர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.