திருப்பூர்: மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர்மழையால் திருப்பூர் அணைப்பாளையம் தடுப்பணை நீரில் மூழ்கியது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பில்லூர் உள்ளிட்ட பல்வேறு அணைகள் நிரம்பி வருகிறது.
இந்த நிலையில், நொய்யல் ஆற்றிலும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் உள்ள நல்லம்மன் கோயில் மற்றும் வழிப்பாதை முழுவதுமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அதே போல, திருப்பூர் பெரியாண்டிபாளையத்தில் இருந்து அணைப்பாளையம் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலமும் வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தரைப்பாலத்தின் இரு புறங்களிலும் கற்களை வைத்து காவல் துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். அதே வேளையில், தரைப்பாலத்துக்கு அருகில் உள்ள மேம்பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று வருகிறது.