கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தனியாா் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக மேலும் இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், பெரிய நெசலூா் கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17), கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்தாா்.
மாணவி கடந்த 13-ஆம் தேதி மா்மமான முறையில் உடலில் காயங்களுடன் பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தாா். இதையடுத்து, அவரது மரணத்துக்குக் காரணமானவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி அவரது பெற்றோா், உறவினா்கள், பொதுமக்கள் கடந்த 4 நாள்களாகப் போராட்டம் நடத்திவந்த நிலையில் மாணவியின் உடலையும் வாங்க மறுத்தனா்.
இந்நிலையில், 5-ஆவது நாளாக நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாணவியின் உறவினா்கள், ஆதரவாளா்கள் கனியாமூரில் தனியாா் பள்ளி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் அமைப்பினர் திரண்டு பள்ளியை முற்றுகையிட்டு பள்ளியை அடித்து நொறுக்கி, பள்ளி சூறையாடப்பட்டு பேருந்துகள் உள்பட 18-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதில், விழுப்புரம் சரக டிஐஜி உள்பட சுமாா் 100 போலீஸாா் காயமடைந்தனா்.
மாணவி மரணமடைந்த வழக்கில், பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து பள்ளியில் பணிபுரியும் இரண்டு ஆசிரியைகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கலவரத்தில் ஈடுபட்ட வழக்கில் 329 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.