தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவின் நிலை குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா விளக்கமளித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுமுதல் நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தில், தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவின் தற்போதைய நிலை குறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த கேள்விக்கு பதிலளித்து மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா அளித்துள்ள விளக்கத்தில்,
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா மே 2ஆம் தேதி தமிழக ஆளுநர் மூலம் பெறப்பட்டது.
நீட் விலக்கு மசோதா மீது மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் தனது கருத்துகளை ஜூன் 21 மற்றும் 27ஆம் தேதிகளில் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. தமிழக அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.
தமிழக அரசு பதிலளித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும். இறுதி முடிவெடுப்பதற்கு தேவைப்படும் காலவகாசம் குறித்து முடிவு செய்ய வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.