2 நாள்களில் 8 தமிழக எம்.பி.க்கள் இடைநீக்கம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடந்த 2 நாள்களில் தமிழகத்தை சேர்ந்த 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மழைக்கால கூட்டம் கடந்த ஜூலை 18ஆம் தேதி தொடங்கியது முதலே ஜிஎஸ்டி வரி, விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இரு அவைகளிலும் நாள்தோறும் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்க அவைத் தலைவர்கள் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபடத் தொடங்கினர்.
முதல் வாரத்தில் இரு அவைகளும் தொடர் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இரண்டாவது வாரத்தில் நாடாளுமன்ற அலுவல்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் காரணமாக முதல் நாளான நேற்று மக்களவையில் அமளியில் ஈடுபட்ட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மாநிலங்களவை: திமுக எம்.பி.க்கள் உள்பட 19 பேர் இடைநீக்கம்
அதில், தமிழகத்தை சேர்ந்த விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், கரூர் எம்.பி. ஜோதிமணி ஆகியோரும் அடங்குவர்.
இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று காலை முதல் தொடர்ந்து அமளி நடைபெற்று வந்த நிலையில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 19 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இந்த வாரம் முழுவதும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தில்லியில் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது!
அதில், திமுகவை சேர்ந்த என்.ஆர். இளங்கோ, சண்முகம், கிரிராஜன், எம்.எம். அப்துல்லா, கனிமொழி சோமு, கல்யாண சுந்தரம் ஆகியோர் அடங்குவர்.
கடந்த 2 நாள்களில் இடைநீக்கம் செய்யப்பட்ட 23 எம்.பி.க்களில் 8 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.