
ஆடி அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் தாமிரவருணியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் செய்து வழிபட்டனர்.
தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை நாள்களில் புனித நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனாக் கட்டுப்பாட்டால் புனித நதிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து நிகழாண்டு ஆடி அமாவாசைக்கு பாபநாசம் தாமிரவருணி நதியில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆயிரக் கணக்கானவர்கள் குடும்பத்துடன் வந்திருந்து தாமிரவருணியில் நீராடினர்.
இதையும் படிக்க | அரசியல் சதுரங்கத்தில் அடுத்த நகர்வு என்ன?
ஆடி அமாவாசையை முன்னிட்டு பாபநாசம் சிவன் கோயில் அதிகாலையிலேயே திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. நதியில் நீராடிய பக்தர்கள் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு கார், வேன், தனியார் பேருந்து உள்ளிட்டவை அகஸ்தியர் பட்டியில் நிறுத்தப்பட்டன. அகஸ்தியர் பட்டியிலிருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தலைமையில் போலீஸார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், ஆம்பூர் கடனாநதி, கடையம் ராமநதி, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி தாமிரவருணி கரைகளிலும் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.