அரசியல் சதுரங்கத்தில் அடுத்த நகர்வு என்ன?

 சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் பிரதமர் மோடி தொடக்கிவைக்கும் நிலையில், தமிழக அரசியல் சதுரங்கத்தில் அடுத்த நகர்வு என்ன என்பதை அறிய அரசியல் ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர். 
அரசியல் சதுரங்கத்தில் அடுத்த நகர்வு என்ன?

 சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் பிரதமர் மோடி தொடக்கிவைக்கும் நிலையில், தமிழக அரசியல் சதுரங்கத்தில் அடுத்த நகர்வு என்ன என்பதை அறிய அரசியல் ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர்.
 எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரில் பிரதமர் மோடியின் ஆதரவு யாருக்கு என்பதற்கான போட்டி இப்போது உருவாகியுள்ளது. இரு தரப்பினருமே மோடியின் ஆதரவைப் பெற முயற்சி செய்து வருகின்றனர்.
 தில்லிக்கு 4 நாள் பயணமாக சென்ற அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை தனிப்பட்ட முறையில் சந்திக்க நேரம் கிடைக்காததால், பயணத் திட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு சென்னைக்குத் திரும்பியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
 குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவின்போது, பிரதமர் மோடி முக்கிய அலுவல்களில் இருந்ததால் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை என்றும், சென்னையில் நிச்சயம் சந்திப்பார் என்றும் அவரது தரப்பினர் காத்திருக்கின்றனர்.
 குடியரசு துணைத் தலைவர் பதவிக்காக ஜகதீப் தன்கர் வேட்புமனு தாக்கல் செய்தபோது, ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் பிரதமர் மோடியுடன் நடந்து சென்ற புகைப்படத்தைப் பார்க்கும்போதும், ரவீந்திரநாத்தை கட்சிசாரா மக்களவை உறுப்பினராகப் பதிவு செய்யும்படி எடப்பாடி பழனிசாமி அனுப்பிய கடிதத்துக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதும், ஏதோ ஒரு சமிக்ஞையை எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு பிரதமர் மோடி கொடுக்கிறார். அதனால்தான் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி உள்ளிட்டோருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது; மேலும் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான வழக்குகளை சிபிஐ விசாரிக்கத் தொடங்கியுள்ளது என்கின்றனர் ஓ.பி.எஸ். தரப்பினர்.


 பாஜக உத்தி என்ன? பாஜகவை பொருத்தவரை, 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து கணிசமான மக்களவை உறுப்பினர்களைப் பெற்றாக வேண்டும் என்பதுதான் முக்கிய இலக்கு. அதற்கு வலுவான கூட்டணி தேவை.
 திமுக-காங்கிரஸ் கூட்டணி 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என தொடர்ந்து வெற்றிப் பாதையில் இருப்பதால், அதில் இடம் பெற்றுள்ள கட்சிகள் 2024 மக்களவைத் தேர்தலிலும் அப்படியே தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளே தென்படுகின்றன.
 மேலும், 13 சதவீத சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு உறுதியாகக் கிடைத்து வருவதால், பாஜகவுடன் நேரடியாகக் கூட்டணி வைக்க அந்தக் கட்சி விரும்பாது. அப்படி இருக்கும்போது, திமுக கூட்டணிக்கு வலுவான போட்டி கொடுத்து வெற்றி பெற வேண்டுமெனில், இரட்டைத் தலைமையிலான அதிமுக, பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து 1998 மக்களவைத் தேர்தல் போன்று வலுவான அணியைக் கட்டமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பாஜக மேலிடம் இருந்தது.
 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 33 சதவீத வாக்குகளைப் பெற்றது. இது, 2021 பேரவைத் தேர்தலில் 40 சதவீத வாக்குகளாக உயர்ந்தது. திமுக-அதிமுக கூட்டணிகளுக்கு இடையே வாக்கு வித்தியாசம் 5.5 சதவீதம் மட்டுமே. அதே அணியைத் தொடர்ந்தால் கொங்கு மண்டலம், தென் மாவட்டங்களில் குறைந்தபட்சம் 15 தொகுதிகளையாவது கைப்பற்றி இருக்கலாம் என்பது பாஜக மேலிடத்தின் கணக்காக இருந்தது.
 எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் 95 சதவீத கட்சி நிர்வாகிகள்இருந்தாலும், ஓ.பன்னீர்செல்வம் அனைத்து தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை களமிறக்கினால், திமுக கூட்டணி மீண்டும் 2019 மக்களவைத் தேர்தலைப் போல 2024 தேர்தலிலும் வெற்றிக்கனியைப் பறிக்கக்கூடும். தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகள் முற்றிலுமாக அதிமுக-பாஜக அணிக்கு கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போகக்கூடும்.
 இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலையில், திராவிட கருத்தியலுக்கு எதிராக தமிழ் தேசியம், ஹிந்துத்துவ கருத்தியல்கள் வலுப்பெறக்கூடும். இதன்மூலம், பலமுனைப் போட்டியால் உத்தரபிரதேசம், பிகார், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஜனதா தளம் உடைந்து பாஜக வலுப்பெற்றதுபோல தமிழகத்திலும் பாஜக வலுப்பெறும் என்பது அந்தக் கட்சியில் சிலரது நம்பிக்கை.
 கருணாநிதி, ஜெயலலிதா என இரு பெரும் ஆளுமைகள் இல்லாத சூழலில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 சதவீத வாக்குகளை பாஜக பெற்றது. கடந்த சில மாதங்களாக வட தமிழகத்தில்கூட பாஜகவின் போராட்டங்களுக்கு தொண்டர்கள் அதிகளவில் வருவதைப் பார்க்கும்போது அந்தக் கட்சிக்கு தனிப்பட்ட முறையில் 10 சதவீத வாக்குகளுக்கு மேல் கிடைக்கலாம்.
 பாமக, அமமுக, தேமுதிக மற்றும் உதிரிக் கட்சிகளுடன் பன்னீர்செல்வம் தரப்பை இணைத்துக் கொண்டு அல்லது தவிர்த்துவிட்டு தேர்தலை சந்தித்தால் கணிசமான தொகுதிகளைப் பெற முடியும் என தேர்தல் நுணுக்கங்களை நுட்பமாக ஆய்வு செய்யும் சில பாஜக தலைவர்கள் கட்சித் தலைமைக்கு தெரிவித்துள்ளனர்.
 2014-இல் பாஜக, பாமக, தேமுதிக, மதிமுக, கொமதேக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் மூன்றாவது அணியாக களம் இறங்கியபோது மும்முனைப் போட்டியில் பாஜகவின் எதிர்ப்பு வாக்குகள் சிதறியதால் கன்னியாகுமரி, தருமபுரி, புதுச்சேரி ஆகிய மூன்று மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது.
 அதேபோல, இப்போது திமுக-காங்கிரஸ் அணி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி, பாஜக தலைமையிலான அணி, நாம் தமிழர் கட்சி என நான்குமுனைப் போட்டி அல்லது பன்னீர்செல்வத்தை கழற்றிவிடும்போது அது ஐந்துமுனைப் போட்டியாக உருவெடுத்தால் கன்னியாகுமரி உள்பட சில தொகுதிகளையாவது பாஜக கூட்டணியால் பெற முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
 ஒன்றுபட்ட அதிமுக, பாமக, தேமுதிக, அமமுக மற்றும் உதிரிக் கட்சிகள் என திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக ஒரே அணியைத் திரட்டுவது சாத்தியமல்ல; அப்படியே திரட்டினாலும் பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுக அணியில் ஒருமுகமாக குவிந்து 2004, 2019 மக்களவைத் தேர்தல்களைப் போல முடிவு வந்துவிடக்கூடும் என்றும், பாஜக மேலிடத்தைக் கட்சி நிர்வாகிகள் சிலர் எச்சரிக்கை செய்கிறார்கள்.
 இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகளின் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தால், இந்திரா காந்தி குடும்பத்தில் இருந்து ஒருவர் பிரதமர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டால் அந்த அணி 50 சதவீத வாக்குகளைத் தாண்டி அதிக தொகுதிகளைக் கைப்பற்றிவிடுகிறது.
 2024 மக்களவைத் தேர்தலிலும் திமுக கூட்டணி பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்னிறுத்தப்பட்டால் அந்தக் கூட்டணி அதிக வாக்குகளைப் பெறலாம்.
 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுகவை தனித்து களமிறக்கி 37 தொகுதிகளில் ஜெயலலிதா வெற்றி பெற்றதைப் போல, ஸ்டாலினும் காங்கிரûஸ கழற்றிவிடக்கூடும் அல்லது அந்தக் கட்சிக்கான தொகுதிகள் எண்ணிக்கையை மேலும் குறைக்கக்கூடும். காங்கிரûஸ திமுக கழற்றிவிட்டாலும், தொகுதி எண்ணிக்கையைக் குறைத்தாலும் பாஜகவுக்கு அரசியல் ரீதியாக லாபம்தான்.
 பிரதான திராவிடக் கட்சிகளில் ஒன்றான அதிமுக இரு பிரிவுகளாக மாறிய நிலையில், பாஜகவை தமிழகத்தில் வளர்த்தெடுக்க எந்த வகை உத்தியை அந்தக் கட்சி கடைப்பிடிக்கப் போகிறது என்பது பிரதமர் மோடியின் இன்றைய சென்னை பயணத்துக்குப் பிறகு தெரிய வரும். பாஜகவின் உத்திதான் தமிழக அரசியல் சதுரங்கத்தின் அடுத்த நகர்வைத் தீர்மானிக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com