தமிழக அரசு சார்பில் காவல் துறை தலைமை இயக்குநர் முதல் காவலர் வரை இந்தாண்டு ''காவலர் பதக்கங்கள்'' வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் தமிழக காவல் துறைக்கு குடியரசுத் தலைவர் கொடி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் குடியரசுத் தலைவர் கொடியை வெங்கையா நாயுடுவிடமிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசும்போது, தமிழக காவல் துறைக்கு இந்த ஆண்டு முதல் காவலர் பதக்கங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் பேசியதாவது, 160 ஆண்டுகள் காவல் துறை ஆற்றிய பணிக்கு கிடைத்த அங்கீகாரம்தான் குடியரசுத் தலைவர் கொடி. தமிழக காவல் துறை தனக்கு தானே சல்யூட் அடித்துக்கொள்ளக் கூடிய சிறப்பான நிகழ்வு இது.
தமிழக காவல் துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இன்றைய தினம் அமைந்துள்ளது. தமிழக அரசு சார்பில் டிஜிபி முதல் காவலர் வரை இந்தாண்டு காவலர் பதக்கங்கள் வழங்கி கெளரவிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.