கம்பம்: லோயர்கேம்ப் பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் 69 நாள்களுக்குப் பிறகு மின் உற்பத்தி தொடங்கியது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பயன்படுகிறது.
மேலும், லோயர் கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாறு நீர்மின்சார உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தி செய்யவும் தண்ணீர் பயன்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணையில் மழை பெய்யாததால், அணைக்கும் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் கடந்த மார்ச் 19 ஆம் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது, வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர், இரச்சல் பாலம் வழியாக பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டது, அதனால் மின்சார உற்பத்தியும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமை கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீர் வினாடிக்கு 300 கன அடியாக திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் மூலம் லோயர் கேம்ப் பெரியாறு மின்சாரம் உற்பத்தி நிலையத்தில் உள்ள நான்கு மின்னாக்கிகளில், ஒரு மின்னாக்கி மட்டும் இயக்கப்பட்டு, 27 மெகாவாட் மின்சார உற்பத்தி புதன்கிழமை தொடங்கியது.
69 நாள்களுக்குப் பிறகு மின்சார உற்பத்தி புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது என்று பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலைய பொறியாளர்கள் தெரிவித்தனர்.