சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேவுள்ள கோட்டை வேங்கைபட்டியில் 235வது பெரியார் நினைவு சமத்துவபுரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இது சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 9வது சமத்துவபுரமாகும்.
அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளையும் தொடக்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் காரையூரில் ரூ. 119.66 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
ரூ.24.77 கோடி மதிப்புள்ள 44 முடிவுற்ற நலப்பணிகளையும் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது, வீரம் விளைந்த சிவகங்கை மண்ணில் நடைபெறும் விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையாக வாழவே சமத்துவபுரங்கள். அனைத்து குடும்பங்களும் ஒற்றுமையுடன் எந்தவித வேறுபாடுமின்றி வாழ வேண்டும் என பெரியார் கனவு கண்டார். அதனை திமுக நிறைவேற்றி வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சி செயலற்ற, நிர்வாக திறமையற்ற ஆட்சி. உள்நோக்கத்துடனேயே சமத்துவபுரங்களை கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி கிடப்பில் போட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.