தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கோடை வெப்பத்திலிருந்து காப்பாற்ற வரும் ஜெட் ஸ்ட்ரீம்! சென்னைக்கு மழை எப்போது?

ஜெட் ஸ்ட்ரீம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு மழை இருக்குமா? என்பது பற்றி..

News image
மழைக் காற்று - பிரதி படம்- ENS
Updated On :18 மார்ச் 2026, 9:15 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: ஜெட் ஸ்ட்ரீம் வளைவு காரணமாக மார்ச் 20 வரை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் இன்று (18ம் தேதி) உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் இன்றும் நாளையும் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக மக்கள் கோடை வெப்பத்திலிருந்து சில நாள்கள் தப்பிக்கும் வகையில் ஜெட் ஸ்ட்ரீம் மழை மேகங்களைக் கொண்டு வருகிறது.

இது குறித்து வானிலை பற்றி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டிருப்பதாவது,

ஜெட் ஸ்ட்ரீம் என்பது மேல்மண்டலத்தில் மிக வேகமாக வீசும் காற்றோட்டம். இது மிகவும் குறுகியதாகவும், சுருண்டோடும் தன்மையுடன் இருக்கும். அதிக அழுத்த மாறுபாடுகள் காரணமாக, இந்த காற்று மிக அதிக வேகத்தில் நகர்கின்றன. இந்த காற்றோட்டம் பொதுவாக பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 12 கிமீ உயரத்தில் (200 hPa அளவில்) காணப்படுகிறது.

சில நேரங்களில் ஜெட் ஸ்ட்ரீம் ஓட்டத்தில் ஒரு “வளைவு” (kink) உருவாகிறது. இது மேல்மட்டத்தில் காற்று பிரிவை (upper level divergence) உருவாக்கி, மேகங்கள் உயரமாக எழும்ப உதவுகிறது. இதனால் கீழே மழை உருவாகும் சூழல் ஏற்படுகிறது.

இந்த வகையான ஜெட் ஸ்ட்ரீம் வளைவு காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மார்ச் 20 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் மார்ச் 17 மழை நிலவரம்! தமிழ்நாட்டின் மேற்குப் பகுதிகளான ஈரோடு, திருப்பூர், தென்காசி, கோயம்புத்தூர், மதுரை, தேனி, நீலகிரி, சேலம் ஆகிய இடங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பதிவானது.

தமிழகத்தில் இன்று! இந்த ஜெட் ஸ்ட்ரீம் அமைப்பில் ஏற்பட்டிருக்கும் சிறிய மாற்றத்தால், இன்று தமிழ்நாட்டின் பல உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று எந்த மாவட்டத்தில் மழை பெய்யும் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது, ஏனெனில் பல மாவட்டங்களுக்கு இன்று மழை வாய்ப்பு உள்ளது.

கிருஷ்ணகிரி – சேலம் – திருச்சி – மதுரை பகுதிகளுடன், அருகிலுள்ள திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல் மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேற்குப் பகுதிகளான கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் மழை பெய்யலாம். அதேபோல் தெற்கு மாவட்டங்களான விருதுநகர், தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி பகுதிகளிலும் மழை வாய்ப்பு உள்ளது.

சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் (hailstorm) ஏற்படலாம், இது ஜெட் ஸ்ட்ரீம் வளைவு நேரிடும்போது ஏற்படும் நிகழ்வாகும்.

பெங்களூருவிலும் இன்று மீண்டும் மழை பெய்யும். நேற்றைய நாளை விட இன்று அதிகமான பகுதிகளில் பெய்யலாம்.

சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில், அதிகாலை நேரத்தில் (மார்ச் 19)ஆங்காங்கே ஒரு சில இடங்களில் திடீர் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இது பொதுவாக மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஏற்படக்கூடும், ஏனெனில் இது கடற்கரை பகுதிகளுக்கு அருகில் உள்ளது என்பதால். எனவே, சென்னை உள்ளிட்ட மாவட்ட மக்கள் இந்த மழையைக் காணும் வாய்ப்பைத் தவறவிடலாம்.

இந்த மழை காரணமாக வெப்பம் குறைகிறதோ இல்லையோ, மேகமூட்டம் அதிகரித்து, குறிப்பாக உள் மாவட்டங்களில் வெப்பம் குறைந்து சற்று குளிர்ச்சி ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.