தமிழக மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன்: மு.க.ஸ்டாலின்

தமிழக மக்கள் என் மீதும், ஆட்சி மீதும் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற தொடர்ந்து பாடுபடுவேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கோட்டைவேங்கைபட்டி கிராமத்தில் ரூ. 3.11 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கோட்டைவேங்கைபட்டி கிராமத்தில் ரூ. 3.11 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
Published on
Updated on
1 min read

சிவகங்கை: தமிழக மக்கள் என் மீதும், ஆட்சி மீதும் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற தொடர்ந்து பாடுபடுவேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே காரையூரில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:

இந்திய விடுதலையில் சிவகங்கை மண் முக்கியப் பங்கு வகித்துள்ளது. திராவிட இயக்கத்தின் முக்கிய நோக்கமே சமத்துவம், கல்வி ஆகியவை தான். அதனால் தான் கருணாநிதி அனைத்து வசதிகளுடன் கூடிய சமத்துவபுரம் திட்டத்தை தொடங்கினார்.

அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கு சென்று சேர்ப்பது தான் திராவிட மாடல் ஆட்சி. அந்த பணியை கடந்த ஓராண்டாக மக்களை நேரடியாகச் சென்று வழங்கி வருகின்றோம்.

கருணாநிதியின் இடத்தை யாரலும் நிரப்பிவிட முடியாது. ஆனால் அவரைப் போல செயல்பட முடியும்.

தற்போதைய ஆட்சி மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழக மக்கள் என் மீதும், ஆட்சி மீதும் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற தொடர்ந்து பாடுபடுவேன் என்றார்.

முன்னதாக, மதுரை மேலுரிலிருந்து சாலை மார்க்கமாக சிங்கம்புணரி அருகே கோட்டைவேங்கைபட்டி கிராமத்துக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு ரூ. 3.11 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார்.

பின்னர், அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் காரையூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார்.

விழாவில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட துறைகளில் ரூ.119.68 கோடி மதிப்பிலான 127 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, வேளாண் உள்ளிட்ட துறைகளில் ரூ. 24.77 கோடி மதிப்பில் நிறைவு பெற்ற 44 பணிகளை தொடக்கி வைத்தார். மேலும், பல்வேறு துறைகள் சார்பில் 56,726 பயனாளிகளுக்கு ரூ. 136. 45 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில்,அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆ.தமிழரசி, ரவிக்குமார்(மானாமதுரை), எஸ்.மாங்குடி(காரைக்குடி), சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com