தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்,
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடில் பிரசித்திப் பெற்ற காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதர் ஆலயம் அமைந்துள்ளது. சரபோஜி மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தின் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு கடந்த ஓர் ஆண்டுகளாக ரூ.1 கோடி மதிப்பீட்டில் கோபுரங்கள் புணரமைக்கப்பட்டு, கோயில் புணரமைக்கும் பணிகள் நடைபெற்றன. பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
இதனையடுத்து திங்கள்கிழமை காலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்று, சிவச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழுங்க இராஜ கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இதில், ஒரத்தநாடு மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.