வருகிற 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள நிலையில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்த இறுதிக்கட்ட ஆலோசனை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொன்னையன், செம்மலை, மனோஜ் பாண்டியன், வளர்மதி, ஜெயக்குமார் என 11 பேர் கொண்ட குழு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் கலந்துகொள்ளவிருப்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் அதிமுக அலுவலகம் வரவில்லை.
அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' குறித்த தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படுமா என்பது இன்றைய கூட்டத்தில் தெரியவரும்.
'ஒற்றைத் தலைமை' தீர்மானத்திற்கு இபிஎஸ் தரப்பு ஆதரவும் ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பும் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக, அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' சர்ச்சை வலுத்து வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 'ஒற்றைத் தலைமை' குறித்து விவாதிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதையடுத்து, அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' விவகாரம் வலுத்து வருகிறது.
இதையும் படிக்க | 'ஒற்றைத் தலைமை சர்ச்சை': ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை!