அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' சர்ச்சை வலுத்து வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ள கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் ஓபிஎஸ்
தொடர்ந்த 5-வது நாளாக தன்னுடைய ஆதரவாளர்கள் சையதுகான், பால கங்காதரன், மனோஜ் பாண்டியன், ரவிச்சந்திரன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
அதுபோல சேலம் சென்ற இபிஎஸ் சென்னை வந்துள்ள நிலையில் செல்லூர் ராஜு, தங்கமணி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 'ஒற்றைத் தலைமை' குறித்து விவாதிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதையடுத்து, அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' விவகாரம் வலுத்து வருகிறது.
மேலும், வருகிற 23-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.