விராலிமலை: இலுப்பூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மேட்டுச்சாலையில் தனியார் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் வேளாண்,கலை அறிவியல், பொறியியல், நர்ஸிங் உள்ளிட்ட படிப்புகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இதில், பிசியோதெரபி கல்லூரியில் பி.எஸ்சி., பிசியோதெரபி படிப்பை வேலூர் மாவட்டம் அலமேலு மங்களாபுரத்தை சேர்ந்த குமார் என்பவரது மகன் கோகுல கிஷோர் (19) கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி பி.எஸ்சி. பிசியோதரப்பி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்து விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது கோகுல கிஷோர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு பின்னால் வந்த சக மாணவர்கள் உடனடியாக அவரை மீட்டு மோட்டார் சைக்கிளில் இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் போலீசார் கோகுல கிஷோரின் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலுப்பூர் தனியார் கல்லூரியில் தங்கி படித்து வந்த மாணவர் ஒருவர் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறுப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | ஆய்வக டெக்னீசியன் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு