வருகிற ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி

வருகிற ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசுகிறார் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
கூட்டத்தில் பேசுகிறார் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

தஞ்சாவூர்: வருகிற ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2022 - 23-ஆம் ஆண்டுக்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவசாயிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:

வருகிற ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்படவுள்ளது. நெல் சாகுபடிக்கு இணையாக சிறுதானிய உற்பத்தியை முனைப்பாகக் கொண்டு செல்லும் வகையில் இத்திட்டம் அறிவிக்கப்பட இருக்கிறது.

இயற்கை விவசாயத்துக்கும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களை உள்ளடக்கி இருக்கும். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் முழுமை அடையும் விதமாக இந்த பட்ஜெட் அமையும் என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

முன்னதாக கூட்டத்தில் அவர் பேசியது:
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நிகழாண்டு நெல் உற்பத்தி அதிகம். கடந்த ஆண்டு 48 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு 54 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. இது மிகப் பெரிய சவாலாக உள்ளது. எனவே நெல்லுக்கு மாற்றான சாகுபடியை முன்னெடுத்துச் செல்லவேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்யும் இயக்கமாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்ணா மறுமலர்ச்சி திட்டம் போல கலைஞர் வேளாண் மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் 1,997 கிராமங்களில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 5 ஆண்டுகளில் இக்கிராமங்கள் முழுமை பெறும்.

இயற்கை விவசாயத்தைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான விவசாயிகளிடம் ஏற்பட்டு வருகிறது. எனவே 3 ஆண்டுகளில் பசுமைப் புரட்சி உருவாக வாய்ப்புள்ளது. அதற்கான நடவடிக்கையைத் தமிழக முதல்வர் எடுத்து வருகிறார் என்றார் அமைச்சர்.

இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசின் செயலர் சி. சமயமூர்த்தி, வேளாண் துறை இயக்குநர் ஆ. அண்ணாதுரை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை இயக்குநர் எஸ். நடராஜன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆர். பிருந்தாதேவி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com