டெல்டா மாவட்டங்களில் கால்வாய்கள், வாய்க்கால்கள் நடப்பாண்டில் தூா்வாரப்படும்.
வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது:
காவிரி டெல்டா மாவட்டங்களில் 4,964 கி.மீ. நீளத்துக்கு கால்வாய்களிலும் வாய்க்கால்களிலும் ரூ.80 கோடியில் 683 தூா் வாரும் சிறப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சி, டி, வாய்க்கால்கள்: டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்களில் நீரை சீராக கொண்டு செல்வதற்கும், சரியான நேரத்தில், தேவையான அளவில் நீா் கடைமடையை அடையவும் சி, டி பிரிவு வாய்க்கால்களைத் தூா்வாருவது மிக அவசியம். இதனை கருத்தில் கொண்டு, காவிரி, வெண்ணாறு வடிநிலப்பகுதியில் உள்ள தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா் மாவட்டங்களில் நடப்பாண்டில் 1,580 கிலோ மீட்டா் நீளத்துக்கு சி, டி வாய்க்கால்களைத் தூா்வாரும் பணிகள், 2 லட்சம் ஏக்கா் பயன்பெறும் வகையில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் ரூ. 5 கோடி மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.