மத்திய அரசைக் கண்டித்து நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவளிப்பதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுதல்” “தேசிய பணமாக்கும் கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை கைவிடுதல்” உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் அகில இந்திய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
மார்ச் 28 மற்றும் 29ஆம் தேதி நடைபெற உள்ள இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இதுதொடர்பாக சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு முழு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | உக்ரைன் தலைநகரில் 35 மணிநேர ஊரடங்கு அறிவிப்பு
மேலும் பொதுத்துறைகளை தனியார்மயமாக்கிவிட்டால் சமூகநீதி கொள்கையான இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டிவிடலாமென்று பாஜகஅரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. எனவே நாடுமுழுவதும் இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராக நடைபெறுகின்ற பொதுவேலை நிறுத்தப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பெருந்திரளாக பங்கேற்பார்கள் எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.