
சென்னையில் குறைந்தளவே பேருந்துகள் இயக்கப்படுவதால் மெட்ரோ ரயில், ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருள்கள் மீதான விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள், மாா்ச் 28-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாா்ச் 30-ஆம் தேதி காலை 6 மணி வரை (திங்கள், செவ்வாய்) வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்தன. இதற்கு தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததோடு, கட்சி சாா்ந்த தொழிற்சங்கங்களும் ஆதரவளித்துள்ளன.
அதன்படி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொதுவேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை தொடங்கியது. வேலைநிறுத்தம் காரணம் சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பணிக்குச் செல்பவர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் குறைந்தளவே பேருந்துகள் இயக்கப்படுவதால் மெட்ரோ ரயில், ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதையும் படிக்க- நாடு முழுவதும் 2 நாள் வேலைநிறுத்தம் தொடங்கியது
பாரிமுனை, அண்ணாநகர், வடபழனி, தியாகராய நகர், பெரம்பூரில் 90 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் போதிய அளவு இயக்கப்படாததால் பயணிகள் காத்திருக்கின்றனர். மேலும் கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, வேலூர், திருவள்ளூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்திலிருந்து ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்வோர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நாகர்கோவிலில் இருந்து கேளத்துக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஒருசில பேருந்துகள் மட்டும் தமிழக எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. கன்னாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 760 பேருந்துகளில் 250 பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரித்த நிலையிலும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.