நீர் மேலாண்மையில் தமிழகத்துக்கு 3-வது இடம்: கூடுதல் தலைமைச் செயலாளர் விருதினைப் பெற்றார்

நீர் மேலாண்மையில் தேசிய அளவில் தமிழ்நாடு 3வது இடம் பெற்றதையொட்டி, அதற்கான விருதினை மத்திய அரசு இன்று வழங்கியது. 
மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் இருந்து விருதைப் பெறுகிறார் தமிழக நீர்வளத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப.
மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் இருந்து விருதைப் பெறுகிறார் தமிழக நீர்வளத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப.

நீர் மேலாண்மையில் தேசிய அளவில் தமிழ்நாடு 3வது இடம் பெற்றதையொட்டி, அதற்கான விருதினை மத்திய அரசு இன்று வழங்கியது. 

தமிழக நீர்வளத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். சந்தீப் சக்சேனா. இ.ஆ.ப., விருதினைப் பெற்றார். மேலும் 6 பிரிவுகளில் தேசிய நீர் விருதுகளை தமிழ்நாடு பெற்றது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களை இத்துறையின் சிறப்புக்குழு மாநிலம் வாரியாக நேரில் களஆய்வு செய்து, சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கு 3 விருதுகளும், சிறந்த மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை தேர்வு செய்து, விருதுகள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று புதுதில்லியில் விக்யான் பவனில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் , ஜல்சக்தி துறை அமைச்சர்கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியரோ விருதுகளை வழங்கினார்கள். 

முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு முதல் இடத்திற்கான விருதும், ராஜஸ்தான் மாநிலத்திற்கு இரண்டாவது இடத்திற்கான விருதும், தமிழ்நாட்டிற்கு 3வது இடத்திற்கான விருதும் வழங்கப்பட்டது. 

தமிழ்நாட்டிற்கான விருதை நீர்வளத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப.,மற்றும் நீர்வளத் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கு.இராமமூர்த்தி ஆகியோர் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் இருந்து விருதைப் பெற்றுக் கொண்டனர்.

சிறந்த கிராமப் பஞ்சாயத்து (தென்மண்டலஅளவில்) செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வெள்ளப்புதூர் ஊராட்சி இரண்டாம் இடத்திற்கான விருதும், சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரிவில் மதுரை மாநகராட்சி 3வது இடத்திற்கான விருதும், சிறந்த பள்ளிகள் பிரிவில், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப் பட்டினம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல் இடத்திற்கான விருதும் பெற்றன.

சிறந்த தொழில் பிரிவில் ஹுன்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், தமிழ்நாடு இரண்டாம் இடத்திற்கான விருதும், சிறந்த தன்னார்வத் தொண்டு நிறுவன பிரிவில் கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திரா இரண்டாம் இடத்திற்கான விருதும் பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com