
சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தில்லை நடராஜர் ஆலயம் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையானதொரு ஆலயமாகும். பல நூறு ஆண்டுகளாக மன்னர்கள் மற்றும் மக்கள் அளித்த கொடைகளால் விரிவாக்கப்பட்டு, ஏராளமான சொத்துக்களை கொண்ட ஆலயமாக இன்றளவும் விளங்குகிறது.
இதையும் படிக்க | என் உயிருக்கு ஆபத்து: மோடி - அமித் ஷாவை சந்தித்து முறையிட உள்ளேன்'
ஆனால் தீட்சிதர்கள் இந்த ஆலயத்தை தாங்கள் தான் கட்டியதாகவும், அதனால் அவர்கள் குறிப்பிடும் ஆகமவிதிகளின் படியே வழிபாட்டு முறைகள் அமைய வேண்டுமெனவும், ஆலய நிர்வாகத்தில் தீட்சிதர்களுக்கே முழுமையான உரிமை உள்ளதாக உரிமை கோருவதோடு, இதர சமயச் சான்றோர்களை தமிழில் பாடவும் அனுமதிக்க மறுக்கின்றனர். வடலூர் வள்ளலார் தனது திருவருட்பாவை இந்த ஆலயத்தில் அரங்கேற்ற விரும்பிய போது அதை தடுத்த தீட்சிதர்கள் அதற்கு பிறகும் தொடர்ச்சியாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருவதோடு, சமீபத்தில் திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் பாட முயற்சித்த ஆறுமுக நாவலரை அனுமதிக்க மறுத்து தாக்கியது உட்பட அவர்களின் அத்துமீறல் நடவடிக்கைகள் இன்றளவும் தொடர்கின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஆலய நிர்வாகத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்ட தீட்சிதர்கள், ஆலயத்தை ஏதோ தங்கள் சொந்த சொத்து போல பாவிப்பதோடு, தொடர்ச்சியாக பல்வேறு முறைகேடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். வரவு-செலவு விவகாரங்களில் நடைபெறும் எண்ணற்ற முறைகேடுகள், ஆலயத்திற்குள் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் விதிகளை மீறி ஒரு பிரமுகர் இல்லத் திருமணத்திற்கு அனுமதிப்பது, தமிழில் தேவாரம் பாடச் சென்ற ஆறுமுக நாவலர் உள்ளிட்ட பலரையும் தாக்கி அவமானப்படுத்துவது, ஆலயத்தில் பாரம்பரியத்தை கெடுக்கும் வகையில் பல்வேறு செயல்களில் ஈடுபடுவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை பலரும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர்.
சமீபத்தில் ஆலயத்திற்குள் இறை வழிபாட்டுக்கு வந்த பட்டியலின பெண்ணை தீட்சிதர்கள் தாக்கியதால் அவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமையின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரையும் காவல்துறை கைது செய்யவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் மட்டுமின்றி, அனைத்து கோவில் நிர்வாகங்களையும் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கும் உள்நோக்கம் கொண்டுள்ளதாக உள்ளது என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
எனவே, தொடரும் சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையிலும், தமிழகத்தின் பாரம்பரியம் மிக்கதும், மிகவும் பழமையானதுமான தில்லை நடராஜர் ஆலயத்தை பாதுகாத்திடவும், ஆலய நிர்வாக பொறுப்பை முழுமையாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வருவதற்கான வகையிலும் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பு சட்டத்தை நிறைவேற்றிட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.